

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேலூர் மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அஜிஸ்குமார், சிநேகலதா, ராஜேஷ்கண்ணா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்க கூடாது. ஜூலை மாதம் முதல் முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. அதனை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.