

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச்சிக்கல்கள் காரணமாக மெரினாவில் உடல் அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது எனவும், அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மறுப்பு தெரிவித்தற்கு எதிராக, நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது. இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது இன்று இரவு 10.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.