

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நேற்று மாலை காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மு.க.ஸ்டாலினிடம், கருணாநிதி நலம் பெற்று வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்தார். அவருடன் இயக்குனர் தங்கர்பச்சான் சென்றிருந்தார். இதுகுறித்து சைதை துரைசாமி கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 40 ஆண்டு கால நண்பர் கருணாநிதி. அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருந்த போதும் என் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தியவர். அரசியலில் என்னை தன்னுடைய பக்கத்தில் வைத்துக்கொள்ள அவர் எவ்வளவு விரும்பினார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். அந்த உணர்வுகளை மு.க.ஸ்டாலினுடன் பகிர்ந்துகொண்டேன். கருணாநிதி ஆரோக்கியமாக எழுந்து, மீண்டும் ஆளுமை மிக்க தலைவராக பணியாற்ற, நலம்பெற்று வரவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.