

சென்னை,
தமிழிகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வரும் நிலையில், நேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையும் 25 ரூபாய் அதிகரித்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விலை உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.
பெட்ரோல் - டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே,கொரோனா பேரிடரனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? என்று டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.