

மெஞ்ஞானபுரம்:
சாத்தான்குளம் பகுதியில் இருந்து மெஞ்ஞானபுரம் வழியாக திருச்செந்தூர் பகுதிகளுக்கு அதிகளவு பாரத்துடன் இரவு, பகலாக லாரிகளில் மணல் கடத்தல் நடப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உதவி புள்ளியியல், சுரங்கத்துறை அதிகாரி ஜெகதீசன் தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அதிக பாரத்துடன் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. சோதனையின்போது லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுரங்கத்துறை அதிகாரிகள், மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.