அழுது கொண்டே 3 வயது சிறுமி செய்த செயல்; போலீசார் ஆச்சரியம்

குழந்தைகளை தனியாக கடைகளுக்கு அனுப்ப கூடாது என போலீசார் அறிவுரை வழங்கினர்.
அழுது கொண்டே 3 வயது சிறுமி செய்த செயல்; போலீசார் ஆச்சரியம்
Published on

ஓசூர்,

ஓசூர் அருகே சூளகிரியில் 3 வயது பெண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருந்தது. அது வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் நின்று கொண்டிருந்தது. இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில், போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

போலீசார் அந்த சிறுமியிடம் வீட்டின் விலாசம் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். அது அழுது கொண்டே, வீட்டை காண்பிக்கிறேன் என கூறியது. ஆனால், போலீசாரின் இருசக்கர வாகனத்தில் ஏற மறுத்து விட்டது.

அந்த சிறுமி நடந்தே சென்று தனது வீட்டை அடையாளம் காட்டியுள்ளது. சிறுமி நடந்து முன்னே செல்ல, போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். பின்பு, குறுகலான சந்தில் சென்ற சிறுமி வீட்டை அடைந்தது.

அந்த சிறுமி பெற்றோரை கண்டதும் ஆனந்தத்துடன் ஓடி சென்று அவர்களை கட்டியணைத்து கொண்டது. சிறுமியின் செயலை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர். இதன்பின்னர் பெற்றோரிடம் சிறுமி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர்களிடம் குழந்தைகளை தனியாக கடைகளுக்கு அனுப்ப கூடாது என போலீசார் அறிவுரை வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com