

சென்னை,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது. மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் கடந்த 15-ந்தேதி முதலே வடமாநிலங்களுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திக் கொண்டது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட் கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது. இதற்கிடையே அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டபடி லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்து உள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் கனரக வாகனங்களும், 1 லட்சம் மினி வேன்களும் இயங்காது. இந்த வேலைநிறுத்தத்தில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் பங்கு பெறுவதாக அறிவித்து விட்டனர். மத்திய அரசு உடனடியாக எங்களை அழைத்து கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண வேண்டும். அதுவரை எங்களுடைய வேலைநிறுத்தம் தொடரும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது.