தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்தது. அப்போது விநாயகர் தேரில் கட்டப்பட்டிருந்த மூங்கில்கள் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயங்களின் தலைமை பீடமாக விளங்குகிறது. இந்த கோவிலில் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுவது ஆழித்தேரோட்ட விழாவாகும். அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 22-ந் தேதி தியாகராஜர் அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளினார்.

ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஆரூரா, தியாகேசா என பக்தி கோஷமிட்டனர். தேர்கள் கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி வழியாக சென்று மீண்டும் கீழவீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது.

மூங்கில்கள் சரிந்ததால் பரபரப்பு

முன்னதாக விநாயகர் தேர் நகராட்சி அலுவலகம் அருகில் வந்தபோது திடீரென தேரில் கட்டப்பட்டிருந்த மூங்கில் கம்புகள் லேசாக சரிந்தது. இதனை தொடர்ந்து தேர் கட்டுமான தொழிலாளர்கள் விரைந்து அங்கு வந்து சரிந்த மூங்கில் கம்புகளை இரும்பு சங்கிலியால் கட்டி நிலை நிமிர்த்தி சீரமைத்தனர். இதையடுத்து 1 மணி நேரம் தாமதமாக தேரோட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com