

போர்ட் ஆ பிரின்ஸ்,
கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹைதியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை சந்தித்தது.
அந்த விபத்து காரணமாக லாரியில் இருந்த வெளியேறிய பெட்ரோலை கண்ட அருகில் இருந்த பகுதி மக்கள் பாத்திரங்களில் அதை அள்ளிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயினால் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் 60 பேர் தியில் கருகி உயிரிழந்துள்ளனர். விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன.
நூற்றுக்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நடைபெற்ற பகுதியில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி, இதனை தேசிய பேரழிவு என்று தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.