

சென்னை,
71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 73-70 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை பதம் பார்த்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
தமிழக அணியில் ஸ்ருதி 21 புள்ளியும், அஸ்மிதா 16 புள்ளியும், கேப்டன் ஐஸ்வர்யா 10 புள்ளியும் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ரிதிகா 22 புள்ளியும், மன்பிரீத் கவுர் 19 புள்ளியும் எடுத்தனர்.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் தெலுங்கானா 72-64 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தையும், கேரள அணி 83-79 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவையும், நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே 94-36 என்ற புள்ளி கணக்கில் அசாமையும் தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. இன்று நடைபெறும் அரைஇறுதியில் தமிழக பெண்கள் அணி, இந்தியன் ரெயில்வேயை (பிற்பகல் 2.30 மணி) எதிர்கொள்கிறது.
ஆண்கள் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 81-57 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. தமிழக அணி தரப்பில் மொயின் பேக் 17 புள்ளியும், ஏ.அரவிந்த் 15 புள்ளியும், ஜீவநாதன் 10 புள்ளியும் எடுத்தனர். கேரளா அணியில் முகமது ஷிராஸ் 15 புள்ளியும், ஷன்சில் முகமது, செஜின் மேத்யூ தலா 12 புள்ளியும் சேர்த்தனர்.
மற்ற கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடகா 82-65 என்ற புள்ளி கணக்கில் அரியானாவையும், இந்தியன் ரெயில்வே அணி 90-68 என்ற புள்ளி கணக்கில் சர்வீசசையும், நடப்பு சாம்பியன் பஞ்சாப் 90-64 என்ற புள்ளி கணக்கில் உத்தரகாண்டையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரைஇறுதியில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வேயை (இரவு 7 மணி) சந்திக்கிறது.