

ஐதராபாத்,
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முகநூல் கலந்துரையாடலில் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக எனது கணவர் சோயிப் மாலிக் (பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்) பாகிஸ்தானிலும், நான் இங்கும் (ஐதராபாத்) மாட்டிக்கொண்டு விட்டோம். எனது மகன் இஜான் சிறிய குழந்தை என்பதால் அவனை சமாளிப்பதற்கு தான் கஷ்டமாக உள்ளது. இஜான், தனது தந்தை மாலிக்கை மீண்டும் எப்போது நேரில் பார்க்கப்போகிறானோ என்பது தெரியவில்லை. நாங்கள் இருவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள். யதார்த்த வாழ்க்கையை புரிந்து கொண்டவர்கள். மாலிக்கின் தாயாருக்கு 65 வயது ஆகிறது. அவருக்காக மாலிக் அங்கு இருந்தாக வேண்டும். இந்த கடினமான காலக்கட்டத்தில் என்னையும், அவனையும், வயதான எனது பெற்றோரையும் எப்படி பாதுகாப்பது என்ற எண்ணம் தான் இப்போது என் மனதில் உள்ளது. உண்மையிலேயே டென்னிசை பற்றி சிந்திக்கவில்லை என்று சானியா கூறினார்.