1980-களில் சினிமாவில் நடித்த நடிகர்-நடிகைகள் சந்திப்பு


1980-களில் சினிமாவில் நடித்த நடிகர்-நடிகைகள் சந்திப்பு
x
தினத்தந்தி 21 Nov 2017 10:45 PM GMT (Updated: 21 Nov 2017 8:33 PM GMT)

திரையுலகில் 1980-களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்த நடிகர்-நடிகைகள் சந்தித்து பேசி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

சென்னை,

சினிமா உலகில் 1980 மற்றும் 90 காலகட்டங்கள் இனிமையானவை. அப்போது வெளியான படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தன. எல்லா படங்களுமே அழுத்தமான கதையம்சத்தில் வந்தன. இளையராஜாவின் இசையில் அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

தற்போது ஓரிரு படங்களில் தலை காட்டியதும் ‘மார்க்கெட்’ இழக்கும் நடிகர்-நடிகைகள் போல் அன்றைய நட்சத்திரங்களின் நிலைமைகள் இல்லை. போட்டி இல்லாமல் இருந்ததால் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் அதிக படங்களில் நடித்து ‘மார்க்கெட்’டை நிலையாக தக்க வைத்து இருந்தார்கள்.

அம்மா வேடம்

தற்போது அந்த கதாநாயகிகளில் அம்மா வேடங்களுக்கு மாறி விட்டார்கள். சிலர் சினிமாவை விட்டே விலகி விட்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்றைய இளம் நடிகர்களுக்கு இணையாக தொடர்ந்து கதாநாயகர்களாகவே நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

1980 கால கட்டத்து நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்த வருடம் 8-வது முறையாக அவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள சொகுசு விடுதியில் நடந்தது.

பழைய நினைவுகள்

இதில் சரத்குமார், பாக்யராஜ், சிரஞ்சீவி, வெங்கடேஷ், சுரேஷ், ரகுமான், அர்ஜுன், சுமன், ஜாக்கி ஷெராப், நரேஷ், ராஜ்குமார், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார், அம்பிகா, மோனிகா, ரேவதி, ஷோபனா, ஜெயசுதா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ராதா, சுகாசினி, பூர்ணிமா, சுமலதா, லிசி, பூனம் தில்லான், பார்வதி உள்ளிட்ட 28 நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர். ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். விருந்து, நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.

Next Story