என்னோடு விளையாடு


என்னோடு விளையாடு
x
தினத்தந்தி 21 Feb 2017 11:42 PM GMT (Updated: 21 Feb 2017 11:42 PM GMT)

பரத், ஒரு கட்டிடம் கட்டும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் குதிரை பந்தயத்தில் விடுகிறார்.

கதையின் கரு: குதிரை பந்தய சூதாட்டம்.

 பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, ரூ.27 லட்சத்தை குதிரை பந்தயத்தில் இழக்கிறார். தனது தோல்விக்கான காரணத்தை அவர் ஆராயும்போது, குதிரை பந்தயத்தில் பண பேரம் நடப்பதை கண்டுபிடிக்கிறார்.

வரிசையாக பல பந்தயங்களில் வெற்றி பெற்ற ராதாரவி, ஒரு பந்தயத்தில் தோல்வியை தழுவியதால் குதிரை பந்தயத்தில் இருந்தே விலகுகிறார். மீண்டும் அவர் குதிரை பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக, பந்தயங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் யோக் ஜேப்பியிடம் பேரம் பேசுகிறார். அதற்கு யோக் ஜேப்பியும் சம்மதிக்கிறார். அவருக்கு ராதாரவி அனுப்பும் ரூ.50 லட்சம், கதிர் காருக்குள் சிக்குகிறது.

கதிரும், சஞ்சிதா ஷெட்டியும் காதலர்கள். சஞ்சிதா ஷெட்டியின் வீடு, வங்கி கடனுக்காக ஏலம் போக இருக்கிறது. ரூ.8 லட்சத்தை கட்டினால், சஞ்சிதா ஷெட்டியின் வீடு ஏலத்தில் இருந்து தப்பும் என்கிற சூழ்நிலையில், கதிர் கையில் ராதாரவியின் ஐம்பது லட்சம் சிக்குகிறது. பணத்தை பறிகொடுத்த ராதாரவியின் ஆட்கள், கதிரை துரத்துகிறார்கள்.

குதிரை பந்தயத்தில் பண பேரம் நடப்பதை கண்டுபிடித்த பரத், இழந்த பணத்தை எல்லாம் மீட்டாரா? ராதாரவி ஆட்களிடம் இருந்து கதிர் தப்பினாரா? சஞ்சிதா ஷெட்டியின் வீடு ஏலத்தில் இருந்து தப்பியதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே உச்சக்கட்ட காட்சி.

பரத்துக்கு மாறுபட்ட கதாபாத்திரம். குதிரை பந்தயத்தில் பண பேரம் நடப்பதை அவர் கண்டுபிடிக்கும் காட்சிகளில், ஜேம்ஸ்பாண்ட் பட வேகம். இவரும், சாந்தினியும் சந்தித்துக்கொள்வதும், அந்த சந்திப்புகள் மெதுவாக காதலாக மாறுவதும், ரசனையான காட்சிகள்.

கதிர்–சஞ்சிதா ஷெட்டி ஜோடியின் மோதல்களும், பின்னர் அந்த மோதல்கள் காதலில் முடிவதும், அதற்கு ஒரு எலி காரணமாக இருப்பதும், சுவாரஸ்யமான கற்பனை. பந்தய குதிரைகளின் உரிமையாளர்களாக ராதாரவி, கமலா தியேட்டர் கணேஷ், யோக் ஜேப்பி ஆகிய மூன்று பேரும் வருகிறார்கள். ராதாரவியின் பணக்காரத்தனம் கலந்த மிடுக்கான நடிப்புக்கு தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.

குதிரைப்பந்தய காட்சிகளில் யுவாவின் ஒளிப்பதிவும், ஏ.மோசஸ்–சுதர்சன் எம்.குமார் ஆகிய இருவரின் பின்னணி இசையும் பேசப்படுகின்றன. படத்தின் முதல் பாதியில், வேக குறைவு. குதிரைப்பந்தய சூதாட்டங்களை காட்சிப்படுத்தியிருப்பதில் டைரக்டர் அருண் கிருஷ்ணசுவாமி, கவனம் ஈர்க்கிறார்.


Next Story