இப்படை வெல்லும்


இப்படை வெல்லும்
x
தினத்தந்தி 14 Nov 2017 5:48 PM GMT (Updated: 14 Nov 2017 5:48 PM GMT)

இப்படை வெல்லும் - படம் தீவிரவாதியின் சதிச் செயலை முறியடிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்

கதையின் கரு:  உதயநிதி ஸ்டாலின், ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரும், மஞ்சிமா மோகனும் காதலர்கள். இவர்கள் காதலை மஞ்சிமாவின் அண்ணனும், போலீஸ் அதிகாரியுமான ஆர்.கே. சுரேஷ் கடுமையாக எதிர்க்கிறார். உதயநிதியும், மஞ்சிமா மோகனும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில், தீவிரவாதி டேனியல் பாலாஜி சிறையில் இருந்து தப்புகிறார். ஐதராபாத்தில் வெடிகுண்டுகளை வைத்து நாச வேலைகளில் ஈடுபடுகிறார். அங்கிருந்து சென்னை வருகிறார். சென்னையிலும் வெடிகுண்டுகள் மூலம் நாச வேலை செய்ய முயற்சிக்கிறார். தீவிரவாதி என்று தெரியாமல், அவருக்கு சூரி ‘லிப்ட்’ கொடுத்து உதவுகிறார்.

உதயநிதி பதிவு திருமண அலுவலகத்துக்கு வேகமாக காரை ஓட்டிச் செல்லும்போது, தீவிரவாதி டேனியல் பாலாஜி குறுக்கே வந்து அடிபட-அவரை தீவிரவாதி என்று தெரியாமல், ரத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், உதயநிதி. அவரையும், சூரியையும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து, போலீஸ் துரத்துகிறது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதயநிதியை என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ள முயற்சிக்கிறார், ஆர்.கே. சுரேஷ். அவரிடம் இருந்து உதயநிதி எப்படி தப்பி, தீவிரவாதியின் சதித்திட்டங்களை முறியடித்து, காதலில் வெற்றி பெற்றார்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

உதயநிதி நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், ஒரு நடுத்தர குடும்பத்து படித்த இளைஞரை கண் முன் நிறுத்துகிறார். கட்டிப்பிடித்து நெருக்கம் காட்டாமல், மஞ்சிமா மோகனுடன் இடைவெளி ஏற் படுத்திக் கொண்டு காதல் காட்சிகளுக்கு கண்ணியம் சேர்க்கிறார். சூரியை கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்...ஓடிக்கொண்டே ‘காமெடி’ செய்கிறார். வில்லன் ஆட்களுடன் ஆக்ரோஷமாக மோதுகிறார்.

மஞ்சிமா மோகன் இளமையும், செழிப்பும் மிகுந்த நாயகி. காதலுக்காக அண்ணனை எதிர்த்து பேசும் வசதியான வீட்டுப்பெண். ‘பார்கவி’ கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், மஞ்சிமா. இவருடைய அண்ணன்- போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே.சுரேசுக்கு ‘சூப்பர் வில்லன்’ என்று பட்டமே கொடுக்கலாம்.

ஓட்டமும், துரத்தலுமாக ஓடிக்கொண்டேயிருக்கும் படத்தில் சற்றே இளைப்பாற வைக்கிறார், சூரி. மூக்கை பிடிக்க வைக்கும் அந்த ‘காமெடி’ தேவைதானா? தீவிரவாதி வேடத்துக்கு டேனியல் பாலாஜி, பொருத்தமான தேர்வு. துணிச்சலான அம்மா கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார். “நானும் அரசாங்க ஊழியர்தான். எனக்கும் சட்டம் தெரியும்” என்று போலீஸ் நிலையத்தில், ஆர்.கே.சுரேசுடன் ராதிகா வாக்குவாதம் செய்கிற காட்சியில், கைதட்ட தோன்றுகிறது. கந்து வட்டி ஆசாமியாக ரவிமரியா, போலீசாக ஸ்ரீமன் ஆகிய இருவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திய தெரிந்த முகங்கள்.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு சில காட்சிகளில், பிரமிக்க வைக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள், ஈர்க்கவில்லை. பின்னணி இசை கதையுடனும், காட்சிகளுடனும் ஒன்றியிருக்கிறது.

கவுரவ் நாராயணன் டைரக்டு செய்திருக்கிறார். அவ்வளவு பெரிய தீவிரவாதி விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து சுலபமாக தப்பி ஓடுவதை நம்ப முடியவில்லை. சிறையில் இருந்து சோட்டா தப்பியதில் இருந்து அவர் சென்னை வந்து சதிச்செயலுக்கு ஏற்பாடு செய்வது வரை-படத்தில் வேகம்...வேகம்...அபார வேகம். ஒரே பஸ்சில் தீவிரவாதியின் கைத்தடிகள் அத்தனை பேரும் சிக்குவது, புத்திசாலித்தனமான ‘கிளைமாக்ஸ்.’

Next Story