சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவரை தாக்கி காரை கடத்த முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவரை தாக்கி காரை கடத்த முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 9:15 PM GMT (Updated: 16 Jan 2017 9:06 PM GMT)

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவரை தாக்கி காரை கடத்த முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரை கடத்த முயற்சி

சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 53). கால் டாக்சி டிரைவர். இவரது காரில் கடந்த 13–ந் தேதி நள்ளிரவு கோவளத்தில் இருந்து பெசன்ட் நகருக்கு செல்ல 4 வாலிபர்கள் ஏறினார்கள்.

ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை வந்தபோது முரளிகிருஷ்ணனை தாக்கிய 4 வாலிபர்களும் அவரது கழுத்தை கயிற்றால் நெறித்தனர். அப்போது முரளிகிருஷ்ணன் சத்தம் போட்டார். அந்த நேரத்தில் ரோந்து பணியில் போலீசார் வருவதை கண்டதும், 4 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். போலீசார் விரட்டிச்சென்று ராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது இர்பான் (20) என்பவரை பிடித்து கைது செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிப்பதற்காக நீலாங்கரை போலீஸ் உதவி கமி‌ஷனர் பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், ரஞ்சித் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய வளசரவாக்கத்தைச் சேர்ந்த முகமது இர்பான்(20), நிரோ‌ஷன்(20) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஒடிய கல்யாணை தேடி வருகின்றனர்.


Next Story