ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 11:00 PM GMT (Updated: 17 Jan 2017 8:34 PM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த கோரி அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தியவர்களில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சியில் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று காலை காவிரி பாலம் அருகே திரண்டனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுபோலீஸ் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நின்று சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துமாறு போலீசார் மீண்டும் கூறினர். இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் மாணவர்கள் ஊர்வலமாக கமிஷனர் அலுவலகம் சென்றனர். அங்கு போலீஸ் கமிஷனர் அருணிடம் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றனர்.

வாலிபர் தீக்குளிக்க முயற்சி

இதைதொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று மாலையில் மாணவர்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் மாலை 6 மணி வரை நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து கலைந்து செல்லும் போது திருச்சி காந்திமார்க்கெட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் (வயது22) என்பவர் தான் கேனில் கொண்டுவந்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரிடம் இருந்த கேனை கைப்பற்றி அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை கோட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மவுன போராட்டம்

இதேபோல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கோரிக்கை தொடர்பாக வாசகங்களை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். கோஷம் எதுவும் எழுப்பாமல் மவுனமாக சில மணி நேரம் நின்று கலைந்து சென்றனர்.

தமிழ்தேசிய பேரியக்கத்தின் சார்பில் நேற்று மாலை ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே மாவட்ட செயலாளர் கவித்துவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், அலங்காநல்லூரில் கைதானவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story