பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்


பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 18 March 2017 10:30 PM GMT (Updated: 18 March 2017 9:18 PM GMT)

பழனி, திண்டுக்கல் வழியாக எர்ணாகுளம்–ரமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் வருகிற 2–ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

பழனி,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு பழனி வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் அந்த ரெயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு ரெயில் புறப்படும்.

ஆலூவா, திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை, மானாமதுரை வழியாக 3–ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தை ரெயில் சென்றடையும். அதன்பின்னர் 3–ந்தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் அந்த ரெயில், மறுநாள் காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

பக்தர்கள் கோரிக்கை

எர்ணாகுளம்–ராமேசுவரம் இடையே 553 கிலோமீட்டர் தூரம் உள்ளது. ராமேசுவரத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய முன்பதிவு கட்டணம் ரூ.405, மூன்றடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,120, இரண்டடுக்கு ஏ.சி கட்டணம் ரூ.1,585 ஆகும். தென்னக ரெயில்வேயின் சிறப்பு ரெயில் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேநேரத்தில் இந்த ரெயிலை தினசரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story