ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகள் கைது


ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 20 March 2017 11:15 PM GMT (Updated: 20 March 2017 7:55 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கத்தியுடன் பதுங்கி இருந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, புதுவண்ணாரபேட்டை, காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை காசிமேடு பகுதியில் 2 ரவுடிகள் பதுங்கி இருப்பதாக காசிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் மாறுவேடத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

காசிமேடு பவர்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு பதுங்கி இருந்த 2 ரவுடிகளை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த கத்திகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிடிபட்ட 2 பேரும் காசிமேடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 34), தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் (31) என்பதும், இவர்கள் மீது காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், வெற்றிவேல் பிரபல ரவுடி பாக்சர் வடிவேலுவின் மகன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல், செல்வம் ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story