போத்தனூர்– பொள்ளாச்சி ரெயில் நாளை சோதனை ஓட்டம் பொதுமக்கள் மகிழ்ச்சி


போத்தனூர்– பொள்ளாச்சி ரெயில் நாளை சோதனை ஓட்டம் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 March 2017 10:45 PM GMT (Updated: 22 March 2017 7:24 PM GMT)

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு போத்தனூர்– பொள்ளாச்சி ரெயில் நாளை சோதனை ஓட்டம் பொதுமக்கள் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு

போத்தனூர்– பொள்ளாச்சி ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) சோதனை ஓட்டம் நடக்கிறது. இதற்காக இன்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகல ரெயில் பாதை

போத்தனூர்– பொள்ளாச்சி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணி 2009–ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. இதையடுத்து கிணத்துக்கடவில் புதிய ரெயில் நிலையம், 3 ரெயில்கள் நிற்கும் வகையில் தண்டவாளங்கள், 2 பிளாட்பாரங்கள், ரெயில் நிலையம் உயரமான பகுதியில் அமைந்து இருப்பதால் படிக்கட்டுகள், சாய்வுதள பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. நேற்று சாய்வுதள பாதையில் கைப்பிடிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கிணத்துக்கடவு– பொள்ளாச்சி செல்லும் வழியில் ரெயில்வே தண்டவாளம் சுமார் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த பகுதியில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல் நிலம் தேவைப்பட்டதால் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே நிர்வாகம் செட்டிபாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், நல்லட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் 43 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதற்கு இழப்பீடு தொகையாக ரூ.8 கோடியை நில உரிமையாளர்களுக்கு வழங்கியது.

தண்டவாளம் அமைக்கும் பணி

நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றது. தற்போது போத்தனூர்– பொள்ளாச்சி இடையான 40 கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவுபெற்றது. பின்னர் அகல ரெயில் பாதையில் உள்ள தண்டவாளம் உறுதியாக இருக்கிறதா? சிலிப்பர் கட்டைகள் உறுதியாக இருக்கிறதா? என்பது பற்றி அறிய ரெயில்வே அதிகாரிகள் 3 கட்டமாக நவீன எந்திரங்களை கொண்டு ஆய்வு நடத்தினார்கள்.

அதன்பிறகு பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரையில் டிராலியில் சென்றும், ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தியும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நேற்று வழித்தடத்தில் உள்ள சிக்னல்கள், ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

கிணத்துக்கடவு ரெயில் நிலையம்

அரசம்பாளையத்தில் இருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் பாறைகளுக்கு நடுவே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் 4 லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டி பாதை சீரமைக்கப்பட்டது. மேலும் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பெயர் பலகை அமைக்கப்பட்டு தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர் எழுதப்பட்டது.

அதேபோல் குடிநீர்வசதி, கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இதனால் புதுப்பொலிவுடன் கிணத்துக்கடவு ரெயில்வே நிலையம் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து உதவி தலைமை பொறியாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

போத்தனூர்–பொள்ளாச்சி இடையே 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரெயில்பாதையை ரூ.330 கோடி செலவில் அகலரெயில் பாதையாக மாற்றும் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வரை சென்று ஆய்வு நடத்துகிறார்.

நாளை சோதனை ஓட்டம்

பின்னர் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் வரை அதேபோல் ஆய்வு செய்கிறார்கள். அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் சோதனை ஓட்டத்திற்கு புறப்படுகிறது.

இந்த ரெயில் போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. எனவே பொள்ளாச்சி, கோவில்பாளையம், முள்ளுப்பாடி, கிணத்துக்கடவு, தாமரைகுளம், சொலவம்பாளையம், அரசம்பாளையம், மைலேரிபாளையம், செட்டிபாளையம், போத்தனூர் பகுதிகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் ரெயில் தண்டவாளங்கள் அருகில் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொள்ளாச்சி– போத்தனூர் இடையே 8 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story