ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 March 2017 8:16 PM GMT (Updated: 22 March 2017 8:15 PM GMT)

பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டு சேரி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 24). ஏ.சி. மெக்கானிக்.

ஆவடி,

 இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

ஆவடி–இந்துக்கல்லூரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சேக்காடு பகுதியில் வந்த போது ரெயில்வே கேட் பூட்டி இருந்தது. இதனால் வசந்தகுமார், கீழே இறங்கி மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள், வசந்தகுமாரை எச்சரிக்கை செய்து கூச்சலிட்டனர். ஆனால் இதை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற வசந்தகுமார் மீது மின்சார ரெயில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது. இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story