மாங்காடு அருகே தொலைக்காட்சி பெட்டி தலையில் விழுந்து 7 வயது சிறுமி பலி
தொலைக்காட்சி பெட்டி தலையில் விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த சிவன் தாங்கல், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் மதன். இவர், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஜனனி(7). இவள், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் இரவு ஜனனி, வீட்டில் தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருந்தாள். பின்னர் சேனல் மாற்றுவதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு மேலே இருந்த ‘ரிமோட்டை’ எடுப்பதற்காக தொலைக்காட்சி பெட்டி இருந்த ‘ஸ்டாண்டு’ மீது ஏறினாள்.
தொலைக்காட்சி பெட்டி விழுந்து சாவுஅப்போது எதிர்பாராதவிதமாக தொலைக்காட்சி பெட்டி சரிந்து ஜனனியின் தலையில் விழுந்தது. தொலைக்காட்சி பெட்டியோடு கீழே விழுந்த ஜனனிக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவளை அவரது பெற்றோர், திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி ஜனனி பரிதாபமாக இறந்தாள். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், பலியான ஜனனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.