தீபாவளிக்காக வசூல் செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூர்க்கா வெட்டிக்கொலை


தீபாவளிக்காக வசூல் செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூர்க்கா வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2017 11:15 PM GMT (Updated: 17 Oct 2017 10:09 PM GMT)

தீபாவளிக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூர்க்கா வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

நேபாள நாட்டை சேர்ந்தவர் ராம்சிங் மகன் உம்மர் (வயது 36). இவரது சித்தப்பா ஜேக் சிங்கின் மகன் தீபக் பகதூர் (34). உம்மரின் பெரியப்பா காளி (60). பல வருடங்களுக்கு முன்பு நேபாளத்தில் இருந்து திருச்சிக்கு வந்த இவர்கள் பொன்னகர் பகுதியில் உள்ள கல் உடைக்கும் பாறை பகுதியில் தங்கி இருந்தனர்.

கூர்க்கா இனத்தை சேர்ந்த இவர்கள் கண்டோன்மெண்ட், பீமநகர், பெரிய மிளகுபாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இரவு நேரங்களில் காவல் காக்கும் வேலை செய்வது வழக்கம்.

தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் பகல் முழுவதும் அவர்கள் இரவு வேலை செய்யும் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பணம் வசூல் செய்தனர். இரவு 8 மணி அளவில் கோர்ட்டு அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 3 பேரும் மது குடித்து உள்ளனர். பின்னர் அவர்கள் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு செல்லும் வாசல் அருகில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தீபாவளி வசூல் பணத்தை பங்கு பிரித்தனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் தீபக் பகதூர் தனது கையில் வைத்து இருந்த அரிவாளால் உம்மரின் கழுத்தில் வெட்டினார். இதில் அதிக ரத்தம் வெளியேறிய உம்மர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இரவு முழுவதும் உம்மரின் உடல் சாலை ஓரத்தில் உள்ள மரத்தடியிலேயே கிடந்து உள்ளது. செடி, கொடிகள் மற்றும் புதர் மறைவில் கிடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. உடல் கிடந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் தான் செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையம் உள்ளது. ஆனாலும் நேற்று காலை 9 மணி அளவில் தான் உம்மர் கொலை செய்யப்பட்டு மரத்தடியில் உடல் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடல் அருகிலேயே கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாளும் கிடந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப் -இன்ஸ்பெக்டர்கள் முகமது இப்ராகீம், ரமா உள்பட போலீசார் அங்கு வந்து விசாரணையை தொடங்கினர். உம்மரின் உடலை அவரது பெரியப்பா காளி அடையாளம் காட்டினார். அப்போது அவர் ‘நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து மது குடித்தோம். தீபாவளி வசூல் பணத்தை பங்கு பிரிப்பதில் உம்மருக்கும், தீபக் பகதூருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதும் நான் அங்கிருந்து போய்விட்டேன்’ என கூறினார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் கிடந்த அரிவாள் மற்றும் உம்மரின் உடலில் பதிவாகி இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் ‘ஸ்பார்க்’ வரவழைக்கப்பட்டது. உம்மரின் உடல் அருகில் மோப்பம் பிடித்த ஸ்பார்க் பின்னர் பத்திரப்பதிவு துறை அலுவலகம் வரை ஓடியது. பின்னர் படுத்துக்கொண்டது. அதன் பின்னர் உம்மர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோர்ட்டு, போலீஸ் நிலையம், தீயணைப்பு துறை அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாலையில் சென்ற அனைவரும் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர். போலீசார் அவர்களை நிற்க விடாமல் கலைந்து செல்லும்படி கூறினர்.

இதுபற்றி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். காளி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், உம்மரை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த தீபக் பகதூரை போலீசார் தேடி பொன்னகர் பகுதிக்கு சென்றனர்.

அப்போது தீபக் பகதூர் மத்திய பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கொலை நடந்த 24 மணிநேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story