இன்பமே இன்னும் வா-என்.சி. மோகன்தாஸ்


இன்பமே இன்னும் வா-என்.சி. மோகன்தாஸ்
x
தினத்தந்தி 19 Nov 2017 7:59 AM GMT (Updated: 19 Nov 2017 7:59 AM GMT)

மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

ந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கடும் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். அதில் காயமடைந்த சுவீகா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவளது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலைக்கு சுவீகாவே காரணம் என்று போலீஸ் சந்தேகம் கொள்கிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்துவிட, மெக்கானிக் மாணிக்கமும் விபத்தில் சிக்கி இறக்கிறார். இதற்கிடையே டி.எஸ்.பி. சந்தோஷ், மணீசுடன் சேர்ந்து விசாரணையில் இறங்குகிறார். இந்த நிலையில் பழைய காதலனின் நினைவுகளில் மூழ்கியிருந்த சுவீகா திடீரென்று மனம் மாறுகிறாள். மணீசை திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறாள். அவனும் சம்மதிக்கிறான். அந்த நேரத்தில் போனில் அவளது ஆபாச வீடியோ ஒன்று வருகிறது. அதை பார்த்து சுவீகா அதிர்ந்து போகிறாள். இதற்கிடையே மந்திரி ரத்னாகர் கடத்தப்படுகிறார். அவரை தன்னுடைய ஆட்கள்தான் கடத்தியிருப்பதாக அவருடைய மகன் நகிலன் நினைத்திருந்தான். ஆனால் வேறு யாரோ கடத்தியிருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறான்.

நகிலன் கடுகடுவென்றிருந்தான். டேபிள் மேல் செல் ஸ்பீக்கரில் அதிர்ந்தது.

‘‘என்னடா..! எல்லாம் சரியாய் தானே போய்க்கிட்டிருந்தது? பக்காவா திட்டமிட்டு, கல்யாணத்துக்கு அப்பா வந்து போகும்போது தூக்கணும்ன்னு தெளிவா சொல்லியிருந்தேனேடா!’’

‘‘சொல்லியிருந்தீங்க சார். நாங்களும் தயாராத்தான் இருந்தோம். ஆனா திடீர்ன்னு ஒரு தகவல் அவர் கல்யாணத்துக்கு வரலே. உடம்பு முடியலேன்னு’’

‘‘சரி. கெஸ்ட் அவுஸுக்கு பிளானை மாத்த வேண்டியதுதானே..?’’

‘‘மாத்திப் போறதுக்குள்ளே அவர் அங்கே ரூமுல இல்லை. விசாரிச்சப்போ கிளம்பிப் போயிட்டார்ன்னாங்க. என்ன செய்யறதுன்னு தெரியலே. உங்களை கூப்பிடவும் பயம்!’’ என்று மென்று விழுங்கினான்.

‘‘அவரு கெஸ்ட் அவுஸ்ல இல்லேன்னு தெரிஞ்சவுடனே என்னை கூப்பிட வேண்டியதுதானே! ராஸ்கல்ஸ்!’’

‘‘நீங்க தானே சார் சொன்னீங்க... ரெண்டு நாட்களுக்கு உங்களை யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. போலீசுக்கு சந்தேகம் வரும்ன்னு!’’

‘‘ஆமா.. ம்.. போங்கடா.. உதவாக்கரை பசங்களா..!’’

‘‘சார்.. அவரை காணோம்ன்னு டி.வி.யில செய்தி.. அதுவும் நீங்க செய்தி கொடுத்ததா வருது.. அதனால நான் நினைச்சேன். மந்திரி திருமணத்துக்குப் போகலேங்கிறதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க வேறு ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னு!’’

‘‘ஆமா.. வேறு ஏற்பாடு! வாயில வருது பார்! எடுபடாத நாய்களுக்கு வாய்க்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே!’’

‘‘அப்புறம் டி.வி.யில யாரு செய்தி கொடுத்தது..?’’

‘‘நான் தான்டா! எல்லாம் ப்ளான் படி நடந்திரும் நடத்திடுவீங்கன்னு நம்பி செய்தி அனுப்பினேன்! ஆனா... எல்லாத்தையும் தொலைச்சுட்டு அமுக்கமாயிருந்திருக்கீங்க!’’

***

அந்த தனியார் மருத்துவமனை.

அங்கே பார்க்கிங் காலியாய் கிடந்தது. கூட்டம் குறைந்து வாசலும், மாடிகளும் வெறிச்! ரிசப்ஷன் பெண்களிடம் பழைய உற்சாகமில்லை. வேகமோ மினு மினுப்போ தெரியவில்லை. டாக்டர்களின் அறைகளுக்கு எதிரேயுள்ள நாற்காலிகளும் காலியாய் கிடந்தன.

அதற்கு காரணம் ரம்யா! அவளது கொலை!

சில நாட்கள் அடக்கி வாசிக்கப்பட்டிருந்த அவளது கொலை திடீரென செய்தியாக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல மீடியாக்கள் விழித்துக்கொண்டு அலற ஆரம்பித்தன.

யார் இந்த ரம்யா..?

அவளது கர்ப்பத்திற்கு யார் காரணம்..?

அவளை கொன்றது யார்..?

அதே அறையில் விபத்தில் அடிப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த சுவீகா எனும் மீடியா பெண் எங்கே? அவருக்கு கொலையாளியை தெரியுமா.. அவர்களுக்குள் தொடர்பு உண்டா..?

சுவீகா தலைமறைவு!

மீடியாவில் விசாரித்தபோது, அவள் மருத்துவ விடுப்பில் போயிருக்கிறாள் என அறிய முடிகிறது.

இப்படி செய்திகள் பரவ, பரப்பிக்கப்பட, போலீஸ், போஸ்ட்மார்ட்டம், விசாரணை என அங்கு களேபரப்படவும் நோயாளிகள் வேறு ஆஸ்பத்திரிக்கு வண்டியை திருப்பியிருந்தனர்.

ரிசப்ஷன் பெண்கள், இனி அங்கே இருந்து பிரயோஜனமில்லை - வேறு வேலை தேட வேண்டியதுதான் என்கிற மனநிலையில்.

அப்போது போன் வர, எடுத்தவள், ‘‘சிஸ்டர் கீதாவா.. கொஞ்சமிருங்க’’ என்று கம்ப்யூட்டரைத் தட்டி,‘‘அவங்க இப்போ டூட்டியில் இல்லை சார்!’’ என்றாள்.

‘‘எப்போ டூட்டி..?’’

‘‘தெரியலை சார். ஷிப்ட் ரெஜிஸ்டர்ல அவங்க பேர் இல்லை!’’

அதற்குள் அருகிலிருந்த பெண் போனை வாங்கி, ‘‘சார்.. அவங்க நாலு நாளாய் டூட்டிக்கு வரலே!’’ என்றாள். ‘‘சிக் லீவ்! நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?’’

அதற்குள் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

‘‘யாருடி அது..?’’

‘‘தெரியலை.. இந்த கீதாவை விசாரிச்சு தினம் நாலு போன் வருது!’’

‘‘ஏன்.. என்ன விஷயம்?’’

‘‘உனக்குத் தெரியாதா.. அவ இப்போ.. சஸ்பென்ஷல!’’

‘‘ஏன்..?’’

‘‘அந்த ரம்யா கொலை சமயத்துல டூட்டில இருந்தது இவதானாம். ஏற்கனவே இவ பேர்ல நிர்வாகத்துக்கு ஒரு கண் இருந்தது. கார், பங்களான்னு கீதாவோட வளர்ச்சிக்கு பின்னணியில மர்மம் இருக்காம். அதுவுமில்லாம போலீஸ் விசாரணை தொல்லை வேற!’’

‘‘சஸ்பெண்ட் பண்ணிட்டா எல்லாம் இல்லேன்னு ஆயிருமா..? இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில வெகு எளிதா ஒரு கொலை நடக்குதுன்னா அதுக்கு அவள் மட்டுமே காரணமாகிட முடியுமா.? பெரிய இடத்து சப்போர்ட் இல்லாம இது நடந்திருக்கும்ன்னு நினைக்கிறீயா..?’’

‘‘நமக்கெதுக்குடி அதெல்லாம்.. செல் எடு.. வாட்ஸ் ஆப்புல ஒரு கிக்கான மெஸேஜ் வந்தது. அனுப்பியிருக்கேன்.. எஞ்சாய் ..!’’

***

டி.எஸ்.பி. சந்தோஷ் !

‘‘இந்த வாட்ச்மேன் எப்படி?’’ என்றார்.

‘‘எப்படின்னா...?’’

‘‘பணம் காசு விஷயத்துல..’’

‘‘எல்லாம் வழக்கம் போலதான் சார்! வீக்! காசு கிடைச்சா கண் அடைக்கிற பார்ட்டிதான்!’’ என்ற மணீஷ் வாட்ச்மேனின் அறைக் கதவை தட்டினான்.

அது கீழ் தளத்தில் கார் பார்க்கிங் - லிப்ட் மாடிபடிக் கிடையில் அடங்கியிருந்தது. சற்று நேரத்திற்கு பின் சோம்பல் முறித்து கதவை திறந்த அவன், மணீஷை பார்த்து, ‘‘என்ன விஷயம் சார்.. மறுபடியும் அந்த பொண்ணு பிணங்கிகிச்சா..?’’

‘‘இல்லே.. நீ கொஞ்சம் வெளியே வரியா...?’’

‘‘இன்னா?’’

‘‘கொஞ்சம் வேலையிருக்கு’’

சந்தோஷ், மணீஷை ஒதுக்கிவிட்டு, அவனது பனியனைப் பற்றி, உள்ளே தள்ளிக்கொண்டு நுழைய..

‘‘சார்.. யார் நீங்க.. என்னை ஏன்?’’

‘‘எல்லாம் சொல்றேன். முதல்ல லைட்டை போடு. உட்கார்!’’ என்று சோபாவில் தள்ளினார். அறைக்குள் பாட்டில்கள் கலைந்து, நாற்றம். பார்சல் தட்டுகள் இரைந்து, மீன் முட்கள்!

பிரமாண்ட டி.வி. சொகுசு ஈஸி சேர்! ஹோம் தியேட்டர்! ராட்சத ஸ்பீக்கர்கள்!

‘‘ஏய்.. நீ இங்கே வாட்ச்மேன் தானே..!’’

‘‘ஆமாம் சார்’’

‘‘வேறு எங்கும் வேலை பார்க்கிறீயா?’’

‘‘இல்லை சார். நீங்க யாரு.. போலீஸா.. என்னை ஏன்..?’’

‘‘அது போகப் போக தெரியவரும். உன் வாட்ச்மேன் சம்பளத்துல இத்தனை சொகுசு வாழ்க்கை எப்படி..’’

‘‘இதெல்லாம் என்னோடது இல்லை சார். போன மாசம் காலி பண்ணிட்டுப் போனவர் விட்டுட்டுப் போனது! அவரோட ப்ளாட்டிலிருந்து எடுத்துட்டு வந்து இங்கே வச்சுக்கிட்டேன்’’

‘‘இது எல்லாத்தையும் நீயே பொருத்திக்கிட்டியா..?’’

‘‘இல்லை சார். சிலது தெரியும். ஆள் வச்சு தான்..!’’

‘‘எந்த ஆளை வச்சு..?’’

‘‘பில்டிங் எலக்ட்ரிக் வேலைக்கு வரும் ஆள்!’’

‘‘அந்தாளை கொஞ்சம் கூப்பிடறீயா..?’’

சற்று நேரத்தில் எலக்ட்ரீஷியன் வந்தான்.

சந்தோஷ் அவனை தனியே அழைத்துப் போனார்.

வாட்ச்மேன் பேந்த, பேந்த விழித்தபடி அமர்ந்திருந்தான்.

‘‘மணீஷ் சார்.. இங்கே என்ன நடக்குது.. என்ன பிரச்சினை...?’’

‘‘சொல்றேன்’’

சந்தோஷ் உள்ளே வந்து, ‘‘நான் சொல்றேன். சுவீகா இருக்காங்க இல்லே..?’’

‘‘ஆமா சார். தங்கமான பொண்ணு!’’

‘‘ஒங்கிட்ட சர்டிபிகேட் கேட்கல. அவங்க வீட்டுல திருடு போயிருச்சு’’

‘‘திருடா..?’’

‘‘ஆமா..’’

‘‘எப்போ...?’’

‘‘ரெண்டு நாள் முன்னாடி! அவங்களோட எட்டு பவுன் செயின், வளையல், கேமிரா.. இன்னும் என்னன்னவோ காணாமல் போயிருக்கு!’’

‘‘எனக்கு எதுவும் தெரியாது சார்! எங்கிட்ட யாரும் சொல்லலை!”

‘‘திருட வருகிறவன் உங்கிட்ட சொல்லிட்டு வருவானா..?’’ என்று அவனது டேபிள் டிராயரை திறந்தவர் அங்கிருந்த பேனாவை எடுத்து, ‘‘இது ஏது..?’’ என்றார்.

அவன் நடுக்கத்துடன் பார்க்க ‘‘இது என்னன்னாவது தெரியுமில்லே..?’’

‘‘தெரியாது சார்! விலையுயர்ந்த பேனான்னு நினைக்கிறேன்”

‘‘இல்லை. இது பேனா மட்டுமில்லை. கேமிராவும் இருக்கு. இது எப்படி உனக்கு..? யார் கொடுத்தா..?’’

‘‘யாரும் கொடுக்கலை சார். கிடைச்சது’’

‘‘எங்கே..?’’

‘‘செடிகளுக்கு களை பறிக்கப் போனப்போ, புல்வெளியிலே!’’

‘‘எந்த இடத்துலேன்னு வந்து காட்ட முடியுமா..?’’

அவன் அவர்களை அழைத்துப் போய் காட்டின இடத்துக்கு நேர்மேலேதான் சுவீகாவின் வென்டிலேட்டர் இருந்தது. அவன் வெலவெலப்புடனும், நடுக்கத்துடனும் நின்றிருந்தான்.

‘‘சுவீகாவின் வீட்டில் இதை பொருத்தி வேவு பார்த் திருக்காங்க. அவள் வீட்டுல பொருத்தனும்னா நிச்சயம் யாரோ உள்ளே பிரவேசித்திருக்கணும். உனக்கு தெரியாம அது நடந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லு.. யாரு?’’

‘‘சத்தியமா எனக்குத் தெரியாது சார். அவங்க வீட்டு சாவி கூட எங்கிட்டே இல்லை’’

‘‘அப்புறம்..?’’ என்று சந்தோஷ் அவனது கழுத்தை குறிவைக்க,

‘‘எனக்கு ஒருத்தன் மேல சந்தேகம் சார். அவன்தான் இங்கே அடிக்கடி வருவான்!’’

‘‘சொல்லு. யார் அது?’’

‘‘மெக்கானிக் மாணிக்கம் சார்!’’

(தொடரும்) 

Next Story