தீக்குளித்த பஞ்சர் கடைக்காரர் சாவு நூலக பெண் ஊழியர் கைது


தீக்குளித்த பஞ்சர் கடைக்காரர் சாவு நூலக பெண் ஊழியர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2017 8:30 AM GMT (Updated: 21 Nov 2017 8:30 AM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11½ லட்சம் மோசடி செய்ததால் தீக்குளித்த பஞ்சர் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக நூலக பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது52). பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராணி (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தங்கராஜ் தி.மு.க. முன்னாள் கிளை செயலாளர் ஆவார். தங்கராஜின் தம்பி மகன் அருள்வேல் (22). பி.இ. படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

இவருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதற்காக தங்கராஜ் தனது தம்பியிடம் இருந்து ரூ.11½ லட்சத்தை வாங்கி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் நாமக்கல்லில் உள்ள அரசு நூலகத்தில் ஊழியராக பணியாற்றி வரும் கல்யாணி(40) என்பவரிடம் கடந்த 1½ வருடத்துக்கு முன்பு கொடுத்துள்ளார். ஆனால் கல்யாணி பணத்தையும் திருப்பி கொடுக்காமல், வேலையும் வாங்கி தராமல் தங்கராஜை ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தங்கராஜ் கடந்த 18-ந் தேதி கல்யாணியின் வீட்டு முன்பு தீக்குளித்தார். இதில் உடல் கருகிய தங்கராஜை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஓடப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.

பள்ளிப்பாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் தி.மு.க.வினர் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் தங்கராஜ் உடல் ஓடப்பள்ளிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இதற்கிடையே தங்கராஜ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவரிடம் ஈரோடு 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அவரிடம் தங்கராஜ் நடந்த சம்பவங்களை சுமார் 1 மணிநேரம் மரண வாக்குமூலமாக கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட நூலக பெண் ஊழியர் கல்யாணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான கல்யாணி அ.தி.மு.க. பிரமுகர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story