திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை சுருதியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? போலீசார் விசாரணை


திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரை ஏமாற்றிய நடிகை சுருதியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Jan 2018 10:45 PM GMT (Updated: 19 Jan 2018 8:25 PM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரை ஏமாற்றி மோசடி செய்த நடிகை சுருதியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற சினிமாவில் நடித்து உள்ளார். அது இன்னும் வெளியாகவில்லை. இவர் என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை திருமண ஆசைகாட்டி மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தார். இதில் பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதி, அவருடைய தாய் சித்ரா, தம்பி சுபாஷ், உறவினர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தினால் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால், சுருதி உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். சுருதி உள்பட 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதன்பேரில் போலீசார் அவர்கள் 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடத்திய விசாரணையின்போது போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சுருதி பதில் ஏதும் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மோசடி செய்த பணத்தை எங்கு வைத்துள்ளார்? என்பதை அறிய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சுருதி உள்பட 4 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மற்ற 3 பேரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால் சுருதி மட்டும் எந்த கேள்விகளுக்கும் பதில் கூறவில்லை. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் துணை நடிகைகள், சினிமா தயாரிப்பாளர்கள் குறித்து கேள்வி கேட்டதற்கும் பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தார்.

அவருக்கு உடந்தையாக இருந்த கோவையை சேர்ந்த 2 தொழில் அதிபர்கள் குறித்து கேட்டதற்கும் பதில் தெரிவிக்கவில்லை. புகார் கொடுத்த என்ஜினீயர் பாலமுருகன் குறித்து கேட்டதற்கு, அவர் என்னிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதாலும், அமெரிக்காவில் என்ஜினீயராக இருப்பதால் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிவித்தார். ஆனால் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது குறித்து கூறவில்லை. மோசடி செய்த பணம் குறித்தும் பதில் தெரிவிக்கவில்லை.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகள் குறித்து கேட்டதற்கும் பதில் கூறாமல் அமைதியாகவே இருந்தார். எனவே அந்த நகைகள் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் இந்த மோசடிக்கு பலர் உடந்தையாக இருந்துள்ளனர்.இது குறித்து அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த எண்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுருதி, திருமண ஆசை காட்டி பணக்கார வாலிபர்களுக்கு வலை விரிப்பார். பின்னர் அவர்களிடம் எப்படி எல்லாம் பணம் கறப்பது என்று தனது கூட்டாளிகளுடன் திட்டமிடுவார். இதன்படி பல கதைகளை கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்து இருக்கிறார்.தனது தாயாரின் மூளையில் கட்டி இருக்கிறது என்று கூறி மருத்துவ உதவி கேட்டும் என்ஜினீயர்களிடம் பணம் பெற்று உள்ளார். அதற்கு டாக்டர்கள் கொடுத்த ஆவணங்களையும் என்ஜினீயர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பி உள்ளார். எனவே அந்த ஆவணங்களை டாக்டர் கள்தான் கொடுத்தார்களா? அப்படி கொடுத்து இருந்தால் அந்த டாக்டர்கள் யார்? அல்லது அது போலியாக தயாரிக்கப்பட்டதா? அதற்கு உடந்தையாக இருந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story