ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி


ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 18 May 2022 4:21 PM GMT (Updated: 18 May 2022 4:21 PM GMT)

கைரேகை எந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாணாபுரம்

கைரேகை எந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 
இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்று அல்லது 2 ரேஷன் கடைகள் உள்ளன.

ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு வருவோம்.

 வாக்குவாதம்

அங்குள்ள விற்பனையாளர், கைவிரல் ரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியின் சர்வர் வேலை செய்யவில்லை, எனக் கூறி திருப்பி அனுப்புகிறார். 
நாங்கள் தினமும் காலை 9 மணிக்கு வந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம். தொடர்ந்து இதேபோல் கூறினால் நாங்கள் என்ன செய்வது?. இதனால் ரேஷன் கடைகளில் விற்பனையாளருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது, என்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே சர்வர் சரியாக வேலை செய்யவில்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க தயாராக இருந்தாலும் கருவியில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சர்வர் வேலை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Next Story