கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: நிபுணர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை


கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: நிபுணர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட்டு ஆலோசனை
x
தினத்தந்தி 20 Feb 2017 11:30 PM GMT (Updated: 20 Feb 2017 11:24 PM GMT)

கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

புதுடெல்லி,

காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இரு மாநிலங்களுக்கும் பொதுவான நிபுணர் குழு ஒன்றை அமைப்பது குறித்து தமிழ்நாடும் கர்நாடகமும் இருவாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

கர்நாடகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

காவிரியில் கழிவு நீர்

கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் நகரின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

பாதிப்பு

இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, கர்நாடகத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வேறு வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்த பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள். கர்நாடக தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இது கழிவுநீர் கலக்கும் விவகாரம் என்பதால் கர்நாடக மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு நிபுணர் குழுவை அமைத்து இது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடலாம் என்று கூறினார்கள்.

அதற்கு தமிழக அரசு தரப்பு வக்கீல்கள், இதற்காக கர்நாடக மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தனியாக ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாரபட்சமான அறிக்கை வெளிவர வாய்ப்பு இருக்கலாம் என்றும் தங்கள் சந்தேகத்தை தெரிவித்தனர்.

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அப்படி என்றால் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்புடைய ஒரு நிபுணர் குழுவை விரைவில் அமைப்பது பற்றி இரு மாநிலங்களும் 2 வாரங்களுக்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story