விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.


விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.
x
தினத்தந்தி 23 March 2017 9:30 PM GMT (Updated: 23 March 2017 8:13 PM GMT)

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். நேற்று காலை 7.35 மணிக்கு புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்தான் சென்றாக வேண்டும் என்று அடம் பிடித்தார்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிப்பதற்கு டிக்கெட் எடுக்கப்பட்டு இருந்தது.

திடீரென அவர், நேற்று காலை 7.35 மணிக்கு மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில்தான் சென்றாக வேண்டும் என்று அடம்பிடித்தார். அதில், எல்லா இருக்கைகளுமே ‘எகனாமி’ வகுப்பை சேர்ந்தவை. இருப்பினும், வேறு வழியின்றி அதில் பயணம் செய்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய பிறகும், விமானத்தை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தார்.

தகவல் அறிந்து, ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் (வயது 60) என்பவர், ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.யை அணுகி சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிக்க முடியாத ஆத்திரத்தில், மேலாளரை அடித்து சட்டையை கிழித்தார் எம்.பி.. மூக்கு கண்ணாடியையும் நொறுக்கினார். தனது செருப்பால், மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 தடவை அடித்தார்.

இச்சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்ய ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அத்துடன், இதுபற்றி விசாரித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், ஏர் இந்தியா மேலாளரை அடித்ததை ரவீந்திர கெய்க்வாட் ஒப்புக் கொண்டுள்ளார். ‘யார் இந்த எம்.பி.? நான் மோடியிடம் புகார் செய்வேன் என்று அந்த மேலாளர் கூறினார். அதனால் அவரை செருப்பால் 25 தடவை அடித்தேன். வசைமொழிகளை தாங்கிக் கொள்ள நான் பா.ஜ. எம்.பி. அல்ல, சிவசேனா எம்.பி. இதுபற்றி சபாநாயகரிடம் புகார் செய்வேன்’ என்று அவர் கூறினார்.


Next Story