அரசியலுக்கு வர ‘ரஜினிக்கு தகுதி இல்லை’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை என்று தெரிவித்தார்.
புதுடெல்லி,
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது விவாதப்பொருளாகி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் அளித்த ஒரு பேட்டியில் அவர், “என்னை சந்தித்து பேசி விட்டு வருபவர்கள் நான், அரசியல் பற்றி பேசியதாக கூறுவதை நான் மறுக்கவில்லை. நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் எந்த வித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களை பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி வெளிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ரஜினி நிதி மோசடி செய்துள்ளார். இதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும், “ரஜினிகாந்த் படிப்பறிவு இல்லாதவர். அவர் அரசியலுக்கு தகுதியற்றவர்” என்றும் தெரிவித்தார்.
ரஜினிக்கு எதிரான சுப்பிரமணிய சாமியின் கருத்து, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story