வளர்ச்சி விவகாரங்கள் குறித்து விவாதத்திற்கு தயார் பா.ஜனதாவிற்கு பினராய் விஜயன் பதில்


வளர்ச்சி விவகாரங்கள் குறித்து விவாதத்திற்கு தயார் பா.ஜனதாவிற்கு பினராய் விஜயன் பதில்
x
தினத்தந்தி 20 Oct 2017 2:35 PM GMT (Updated: 20 Oct 2017 2:35 PM GMT)

வளர்ச்சி விவகாரங்கள் குறித்து விவாதத்திற்கு தயார் என பாரதீய ஜனதாவின் சவாலை பினராய் விஜயன் ஏற்றுக் கொண்டார்.

திருவனந்தபுரம்,

வளர்ச்சி திட்ட விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதாவின் சவாலை ஏற்றுக் கொண்ட கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் விவாதத்திற்கான ஏற்பாடை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார். 

கேரளாவில் உள்ள இடதுசாரிகள் கூட்டணி அரசு மீது பாரதீய ஜனதா சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.  

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் சவாலை ஏற்ற பினராய் விஜயன், “பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆக்கபூர்வமான அணுகுமுறையை நான்  எதிர்பார்க்கவில்லை, மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு மற்றும் பங்கை மத்திய அரசின் சலுகை போன்று பிரசாரம் செய்ய பாரதீய ஜனதா துடிக்கிறது,” என விமர்சனம் செய்து உள்ளார் பேஸ்புக்கில். கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் ஆட்சியின் நிலைப்பாடு முற்றிலும் வேறுபாடானது, மத்திய அரசுடன் இணக்கமான உறவையே மேற்கொள்ள விரும்புகிறது, மத்திய அரசிடம் இருந்து கேரளா தன்னுடைய பங்கை பெறுவதற்கு திறன்பட நடவடிக்கையை எடுத்து வருகிறது எனவும் குறிப்பிட்டு உள்ளார் பினராய் விஜயன். 

கேரளா மாநில வளர்ச்சி திட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள பிரதமர் மோடியிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், அதனை பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டிஉள்ளார் பினராய் விஜயன். இவை அனைத்தும் கேரளாவில் பாரதீய ஜனதாவின் மாநிலப்பிரிவு ஏற்படுத்தி உள்ள பகைமை காரணமா? எனவும் பாரதீய ஜனதாவிற்கு கேள்வியும் எழுப்பி உள்ளார். கேரளாவில் காணப்படும் அரசியல் மோதல்கள் தொடர்பாக இருதரப்பு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்க்கப்படும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

பாரதீய ஜனதா கேரளாவில் மேற்கொண்ட பயணத்தின் போது பொய்யை மட்டும் பரப்பினர் எனவும் குற்றம் சாட்டிஉள்ளார். 


Next Story