பாகிஸ்தானின் அத்துமீறிய தொடர் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி


பாகிஸ்தானின் அத்துமீறிய தொடர் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 20 Jan 2018 9:14 AM GMT (Updated: 20 Jan 2018 9:14 AM GMT)

ஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 3வது நாளாக பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியாகினர்.#IndianArmy

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதி மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்த ஜம்மு பிரிவில் கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த வியாழ கிழமை நடந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மற்றும் டீன் ஏஜ் சிறுமி கொல்லப்பட்டனர்.  நேற்று எல்லை பாதுகாப்பு படை வீரர் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்களில் 2 பேர் என 4 பேர் பலியாகினர்.  2 எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், ஆர்.எஸ். புரா பகுதியில் சுசெட்கார்ஹ் பிரிவில் இன்று காலை 1.30 மணியளவில் துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்டது.  அதன்பின் 4 மணிநேரம் கழித்து தாக்குதல் தொடர்ந்தது.

இதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய அத்துமீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் ஆர்.எஸ். புரா பகுதியை சேர்ந்த கவுரா ராம் (வயது 17) என்பவரும் மற்றும் அப்துல்லியன் பகுதியை சேர்ந்த கவுர் சிங் (வயது 45) என்பவரும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று பூஞ்ச் மாவட்டத்தின் கிரிஷ்ண காடி பிரிவில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.  அவர், பஞ்சாபின் சங்ரூர் நகரில் ஆலம்பூர் கிராமத்தினை சேர்ந்த மந்தீப் சிங் (வயது 23) என தெரிய வந்துள்ளது.

#IndianArmy #JK #Jammu #ceasefireviolation


Next Story