கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை


கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
x

திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. கடுமையான வெப்பம் காரணமாக கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளத்து மாநில மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம் மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு 25 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடை வெப்பம் ஒருபக்கம் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்திற்கு மத்தியிலும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கேரளாவில் வரும் 26 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


Next Story