சென்னையில் காணும் பொங்கல் களை கட்டியது; கடற்கரை, பூங்காக்களில் மக்கள் திரளாக கூடினர்


சென்னையில் காணும் பொங்கல் களை கட்டியது; கடற்கரை, பூங்காக்களில் மக்கள் திரளாக கூடினர்
x
தினத்தந்தி 16 Jan 2017 7:45 PM GMT (Updated: 16 Jan 2017 5:18 PM GMT)

சென்னையில் காணும் பொங்கல் களைகட்டியது. கடற்கரை, பூங்காக்களில் மக்கள் திரளாக கூடினார்கள்.

சென்னை,

காணும் பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14–ந்தேதி கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்கள் உள்பட சுற்றுலா தலங்களுக்கு தங்கள் சொந்த பந்தங்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் படைசூழ ஒற்றுமையாக கூடி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி உற்சாகத்தோடும், சிறப்போடும் கொண்டாடும் காணும் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் தினத்தன்று தங்கள் மனதில் எத்தகையக கவலைகள் மற்றும் சோகங்கள் இருந்தாலும் அதனை மறந்துவிட்டு தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்பட சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு காணும் பொங்கல் பண்டிகை கடந்த ஆண்டுகளை போலவே கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் களைகட்டியது.

போலீஸ் பாதுகாப்பு

நேற்று காலை முதலே மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, செம்மொழி பூங்கா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம், கோவளம் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினார்கள்.

மெரினா கடற்கரைக்கு குடும்ப சகிதமாகவும், நண்பர்கள், உறவினர்கள் என மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் ஆகியவற்றில் வந்தனர். கிராம பாரம்பரியத்தை போல் சிலர் மாட்டு வண்டியில் குடும்பமாக சேர்ந்து மெரினா கடற்கரைக்கு வந்ததையும் பார்க்க முடிந்தது. மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்ப்பதற்கும் ஏராளமானோர் வந்தனர். கடற்கரைக்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் காமராஜர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கடலில் குளிப்பவர்கள் யாராவது தொலைந்து போய்விடுவார்கள் என்பதற்காக கடலில் இறங்கி யாரும் குளிக்காத வகையில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணி

தடுப்பு வேலியை தாண்டி யாரும் கடலில் இறங்கிவிடாதபடி போலீசார் தடுப்பு வேலியை ஒட்டி பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அதுமட்டுமில்லாமல் உயர் கோபுரங்களை அமைத்து அதில் போலீசார் ‘பைனாகுலர்’ மூலம் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரியும் நபர்களை கண்காணித்தனர். மேலும் கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர், கப்பல் மூலமும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடலுக்குள் இறங்கவிடாததால் பொதுமக்கள் அனைவரும் கடற்கரை மணற்பரப்பில் குடும்பமாக அமர்ந்து சடசடவென்று வீசும் இயற்கை காற்றை சுவாசித்து, கடல் அழகை ரசித்தனர். மெரினா கடற்கரையில் பஜ்ஜி, சுண்டல், ஐஸ்கிரீம், மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் படுஜோராக இருந்தது.

கலங்கரை விளக்கம்

குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் கவனத்தில் இருந்து தவறி வழி மாறி சென்றுவிட்டால் அவர்களை எளிதில் கண்டுபிடிக்க கடந்த 2014–ம் ஆண்டு போலீசார் புதிய திட்டத்தை கொண்டு வந்தனர்.

அதன்படி, மெரினா கடற்கரைக்கு வந்த குழந்தைகளின் கையில் அடையாள அட்டையையும், அதில் போலீஸ் உதவி எண் மற்றும் பெற்றோர் எண்ணையும் குறிப்பிட்டனர். பெற்றோரிடம் இருந்து வழித்தவறிய குழந்தைகளை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருந்தது.

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தில் ஏறி கடற்கரையின் அழகை பார்த்து ரசிப்பதற்காக பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். வரிசையில் நின்று நுழைவுச்சீட்டு பெற்று கலங்கரை விளக்கத்தை மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர். பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிண்டி சிறுவர் பூங்கா

கிண்டி சிறுவர் பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக நேற்று காலை முதலே பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுடன் குவியத்தொடங்கினர். கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

பூங்காவில் உள்ள சறுக்கல்கள், ஊஞ்சல்களில் குழந்தைகள் விளையாடி மனமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகளை போல பெரியோர்கள் சிலரும் வயது வித்தியாசம் பாராமல் சறுக்கல்கள், ஊஞ்சல்களில் ஏறி விளையாடினார்கள். பின்னர், வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த கட்டுச்சோறு, திண்பண்டங்களை அங்கே கூடி அமர்ந்து குடும்பமாக சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அதேபோல், பூங்காவில் இருந்த மான், குரங்கு, மயில், கொக்கு, பாம்பு பண்ணை, குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பெற்றோருடன் சேர்ந்து குழந்தைகள் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள்

நுங்கம்பாக்கம் கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா, கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், பெசன்ட் நகரில் உள்ள எலியட் கடற்கரை ஆகிய இடங்களிலும் நேற்று மக்கள் கூட்டம் இருந்தது.

காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் மக்கள் சென்றனர். பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள ராட்சத ராட்டினங்களில் ஏறி மக்கள் மனம் மகிழ்ந்தனர். சில பொழுதுபோக்கு பூங்காக்களில் மக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

சிறப்பு பஸ்கள்

கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களை போல கோவில்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததை காண முடிந்தது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக சென்னை மற்றும் அதன் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மக்கள் எந்தவித சிரமும் இல்லாமல் சுற்றுலா தளங்களுக்கு வந்து சென்றனர். போலீஸ் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காணும் பொங்கல் நேற்று அமைதியாக முடிந்தது.


Next Story