ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்லும் ‘முதல்–அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிப்பயணமாக அமையட்டும்’; மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்லும் ‘முதல்–அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிப்பயணமாக அமையட்டும்’; மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 18 Jan 2017 9:10 PM GMT (Updated: 18 Jan 2017 9:10 PM GMT)

ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்லும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பயணம் வெற்றிப்பயணமாக அமையட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வாழ்த்து

ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்தி விடிய விடிய போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்றாலும், பிரதமரை நாளை (இன்று) நேரில் சந்தித்து ‘‘அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறேன்’’ என்று முதல்–அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறேன். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எப்படியாவது நடத்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் முதல்–அமைச்சரின் இந்த டெல்லி பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.

அதே நேரத்தில் மாணவர்களும், இளைஞர்களும், அனைத்து கட்சியினரும் ஜல்லிக்கட்டு கோரி தீவிரமாக போராடுகிறார்கள். தங்கள் உணர்வுகளை உளப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மட்டுமே அனுப்பி, போராடுபவர்களுடன் பேசுவதை தவிர்த்து, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று இளைஞர்களையும், மாணவர்களையும் சந்திக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு பிரதிநிதிகள்

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்கள், இளைஞர்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்–அமைச்சர் சந்தித்தால், தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story