எடியூரப்பா, 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி அழிந்துவிடும் ஈசுவரப்பா பரபரப்பு பேட்டி


எடியூரப்பா, 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி அழிந்துவிடும் ஈசுவரப்பா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2017 11:17 PM GMT (Updated: 18 Jan 2017 11:17 PM GMT)

எடியூரப்பா, 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி அழிந்துவிடும் என்று ஈசுவரப்பா கூறினார்.

பெங்களூரு,

எடியூரப்பா, 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி அழிந்துவிடும் என்று ஈசுவரப்பா கூறினார்.

நடையை மாற்றிக்கொள்ளவில்லை

சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை ஈசுவரப்பா தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈசுவரப்பா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

எடியூரப்பா தனது நடையை மாற்றி கொள்ளவில்லை. எடியூரப்பா தன்னை சுற்றியுள்ள 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்படுகிறார். அவர்களின் கருத்துகளே இறுதியானது என்று அவர் கருதுகிறார். எடியூரப்பா பா.ஜனதாவை விட்டு விலகி கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பினார். இதை யாரும் எதிர்க்கவில்லை.

பா.ஜனதா அழிந்துவிடும்

அவர் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தல் உள்ளிட்ட வி‌ஷயங்களில் எடியூரப்பா தன்னிச்சையாக, ஒருதலைபட்சமாக செயல்பட்டார். இதுபற்றி கட்சி தலைவர்களுடன் முன் ஆலோசனை எதையும் நடத்தவில்லை. எடியூரப்பா, ஈசுவரப்பாவை பார்த்து யாரும் ஓட்டுப்போடுவது இல்லை.

கட்சியை பார்த்து வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். இதை அவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தன்னை சுற்றியுள்ள 4 பேரின் பேச்சை கேட்பதை நிறுத்தினால் மட்டுமே அவர் ஒரு தலைவராக உருவாக முடியும். எடியூரப்பா தொடர்ந்து 4 பேரின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா அழிந்துவிடும். இதற்கு எடியூரப்பாவே காரணமாகிவிடுவார். இந்த பிரச்சினையில் பா.ஜனதா மேலிடம் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் சரியாகவில்லை

எடியூரப்பா தனக்கு வழங்கப்பட்டுள்ள மாநில தலைவர் பொறுப்பை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். தன்னை சுற்றியுள்ளவர்களின் பேச்சை கேட்பதை அவர் நிறுத்த வேண்டும். நான் தான் எல்லாம் என்ற மனநிலையை எடியூரப்பா கைவிட வேண்டும். கடவுள் மீது ஆணையிட்டு சொல்கிறேன், எடியூரப்பா இன்னும் சரியாகவில்லை. நான் குரும்பனாக இருக்கலாம், ஆனால் ஆடு மேய்ப்பவன் அல்ல.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

அதைத்தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சொகடு சிவன்னா கூறுகையில், “காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியை எடியூரப்பா வழங்கியுள்ளார். இதன் மூலம் பா.ஜனதாவை அழிக்க எடியூரப்பா முயற்சி செய்கிறார். கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளை சரிசெய்யுமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடியூரப்பா எடுக்கவில்லை. பா.ஜனதாவில் இருந்து முன்னாள் மேயர் வெங்கடேசமூர்த்தியை நீக்கியது சரியல்ல“ என்றார்.


Next Story