டெங்கு காய்ச்சல் மத்திய குழு சென்னை வருகை தமிழக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை


டெங்கு காய்ச்சல் மத்திய குழு சென்னை வருகை தமிழக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 13 Oct 2017 6:24 AM GMT (Updated: 13 Oct 2017 6:24 AM GMT)

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு சென்னை வருகை தந்தது தமிழக சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.


சென்னை, 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இந்த நிலையில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு சென்னை வந்தது. 5 பேர் கொண்ட இந்த குழுவில் அசுத்தோஸ் பிஸ்வால் (எய்ம்ஸ் மருத்துவமனை), சுவாதி துப்ஸிஸ் (டெல்லி குழந்தைகள் நல மருத்துவர்), கவுஷல் குமார், கல்பனா பருவா, வினய் கார்கி (பூச்சி மூலம் பரவும் நோய் கட்டுப்பாட்டு மையம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

மத்திய குழுவினர் தமிழக சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தினார்கள். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ இயக்க  வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. 

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதா கிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

காலை 10.15 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மத்திய நிபுணர் குழுவினர் டெங்கு பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

மத்திய நிபுணர் குழுவினர்  முதலில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் சென்று நோயாளிகளை பார்த்தனர். 

Next Story