மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் தொடக்கம்


மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 19 Oct 2017 10:30 PM GMT (Updated: 19 Oct 2017 6:51 PM GMT)

மேதின பூங்கா - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் முதல் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததால் தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்காக வண்ணாரப்பேட்டை-கொருக்குப்பேட்டை இடையே முதல் சுரங்கப்பாதை பணி நிறைவடைந்து, தண்டவாளம் மற்றும் சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையே முதல் சுரங்கப்பாதை தற்போது நிறைவடைந்துள்ளது. 2-வது பாதையில் 450 மீட்டர் தோண்ட வேண்டியிருக்கிறது.

மேதின பூங்கா-தேனாம்பேட்டை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த எந்திரம் கடந்த 17-ந்தேதி தேனாம்பேட்டையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுரங்கம் தோண்டும் எந்திரம் பழுதானதால், தேனாம்பேட்டை ரெயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் எந்திரம் வெளியே வரவில்லை.

எந்திரம் பழுது நீக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தை சுரங்கம் தோண்டும் எந்திரம் வந்தடைந்தது. இதன்மூலம் முதல் சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பணிக்காக நடந்துவரும் பெரும்பாலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. அடுத்த 3 மாதத்திற்குள் அனைத்து சுரங்கப்பாதை பணிகளும் நிறைவடைந்துவிடும். மேதின பூங்கா-தேனாம்பேட்டை இடையிலான முதல் சுரங்கப்பாதை தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதால், தற்போது தண்டவாளம், சிக்னல் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன.

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை இடையே மார்ச் மாதம் பணிகள் நிறைவடைந்து, தேனாம்பேட்டை-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படும். அதேபோல நேரு பூங்கா-சென்டிரல் இடையேயும் மார்ச் மாதம் ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் 2-ம்கட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக அடுத்த மாதம் ஜப்பான் நிதிநிறுவனத்துடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. மாநகர போக்குவரத்து கழக பஸ்சிலும், சென்னை மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்யும் வகையில் பயணிகளுக்கு பொதுவான பயண அட்டை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் போக்குவரத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு இயக்க உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

சென்டிரல் பார்க் டவுன் ரெயில் நிலையம் அருகில் ‘சென்னை சதுக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story