ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் ஜெ.தீபா அறிவிப்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் ஜெ.தீபா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2017 9:00 PM GMT (Updated: 19 Oct 2017 8:07 PM GMT)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.

திருச்சி,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய கட்சி கலைக்கப்பட்டு விட்டதாகவும், செயல்பாடுகள் முடங்கிவிட்டதாகவும் கூறுவது தவறு. எனது செயல்பாடுகள் முடங்கவில்லை. தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. தொண்டர்களும், மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் என்று தான் கூறினேன்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினையில் தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளுமே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். நாங்களும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தபோதிலும், அந்த அணிகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். விவாதத்திற்கு பின்னரே இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான் போட்டியிட்டு, மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவேன். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடருவேன்.

டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படாமல், பல கோடி ரூபாயை செலவிட்டு யாரை முன்னிலைப்படுத்துவது என தெரியாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது.

அ.தி.மு.க. அணிகள் கட்டாயத்தின் பேரில் இணைந்து உள்ளது. இதன் பின்னணியில் மத்திய அரசும், தமிழகத்தில் சிலரும் உள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சரியான புரிதல் இல்லை. டி.டி.வி. தினகரன் மக்கள் பிரச்சினை பற்றி கவலைப்படவில்லை. அவர் இந்த ஆட்சியை கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்.

அ.தி.மு.க.வில் பிரிந்தவர்கள் இணையவேண்டும் என்று கூறும் தம்பிதுரை, முதலில் தான் எந்த அணியில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story