சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 1 டி.எம்.சி.யை தொட்டது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 1 டி.எம்.சி.யை தொட்டது
x
தினத்தந்தி 21 Oct 2017 8:47 PM GMT (Updated: 21 Oct 2017 8:47 PM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர் இருப்பு 1 டி.எம்.சி.யை தொட்டதால் இனி குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

சென்னை,

பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது.

இதனால் சென்னை மாநகருக்கு மாற்று ஏற்பாடாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்டுகள், நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், போரூர் ஏரி, நெய்வேலி சுரங்கங்களில் இருந்து கிடைத்த நீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது. லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாநகர பகுதிகள் மட்டுமல்லாது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் முற்றிலுமாக வறண்டு போன சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளுக்கும் ஓரளவு தண்ணீர் வரத்தொடங்கியது.

கடந்த 8 மாதங்களுக்கு மேலாக எதிர்பார்த்த அளவு நீர் இல்லாத இந்த 4 ஏரிகளிலும் தற்போது 1 டி.எம்.சி. நீர் வந்துள்ளது. குறிப்பாக பூண்டியில் 299 மில்லியன் கனஅடி, புழல் 355, சோழவரம் 91, செம்பரம்பாக்கம் 301 உள்பட 4 ஏரிகளிலும் சேர்த்து 1,046 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து 1.39 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.

இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தற்போது 4 ஏரிகளிலும் 1 டி.எம்.சி.க்கு மேல் நீர் இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தொடர்ந்து ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், மேலும் ஏரிகளில் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு குடிநீர் பஞ்சத்துக்கு இனி வாய்ப்பு இல்லை. எனவே போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

Next Story