கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் சென்னை திரும்பினர்


கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக போலீசார் சென்னை திரும்பினர்
x
தினத்தந்தி 16 Dec 2017 6:07 AM GMT (Updated: 16 Dec 2017 6:07 AM GMT)

கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையிலான தனிப்படை சென்னை திரும்பியது.

சென்னை,

சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை கைது செய்வதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர், போலீஸ்காரர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 8–ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ராமாவாஸ் என்ற கிராமத்தில் குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்கச் சென்றபோது, சென்னை தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இணை ஆணையர் சந்தோஷ் குமார் தலைமையிலான தனிப்படை சென்னை திரும்பி உள்ளது.  கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர் முனிசேகரும் சென்னை திரும்பினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story