‘நக வெட்டி கத்தியால் இதயத்தில் குத்தி கொன்றேன்’ கைதான பல் டாக்டர் வாக்குமூலம்


‘நக வெட்டி கத்தியால் இதயத்தில் குத்தி கொன்றேன்’ கைதான பல் டாக்டர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 25 Dec 2017 10:15 PM GMT (Updated: 25 Dec 2017 7:18 PM GMT)

கைதான பல் டாக்டர் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில், நக வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் அவரது இதயத்தில் குத்தி கொலை செய்ததாக கூறி உள்ளார்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில், மது விருந்தில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பல் டாக்டர் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில், நக வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் அவரது இதயத்தில் குத்தி கொலை செய்ததாக கூறி உள்ளார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 42). பல் மருத்துவம் முடித்துவிட்டு, உடலில் பச்சை குத்தும் ‘டாட்டு ஸ்டூடியோ’ நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இருவரும் விவாகரத்து பெற்றாலும் நண்பர்களாக பழகி வந்தனர். இதற்கிடையில் செந்தில்ராஜின் முன்னாள் மனைவிக்கும், அவர் கிண்டியில் நடத்தி வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த சஞ்சீவ்ராஜ் (33) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

அதன்பிறகு சஞ்சீவ்ராஜ், வேறொரு கம்பெனியில் தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தாலும், இவர்களின் கள்ளத்தொடர்பு நீடித்தது. இது செந்தில்ராஜ்க்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செந்தில்ராஜின் முன்னாள் மனைவி, தனது நண்பர்கள், குடும்பத்தினருக்கு மாமல்லபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக தனது முன்னாள் கணவர் செந்தில்ராஜ், கள்ளக்காதலன் சஞ்சீவ்ராஜ் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் என 20 பேருடன் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் கடற்கரை ஓரம் உள்ள தனியார் விடுதியில் 5 அறை எடுத்து தங்கினார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் விடுதியில் அனைவரும் மதுபானம் அருந்தி விட்டு மகிழ்ச்சியில் இருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த செந்தில்ராஜ், தனது முன்னாள் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த சஞ்சீவ்ராஜை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கொலையாளி செந்தில்ராஜ், மாமல்லபுரம் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது முன்னாள் மனைவியுடன் சஞ்சீவ்ராஜ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் புத்தாண்டை கொண்டாட மதுவிருந்துக்கு வரும் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

மருத்துவம் படித்து இருந்ததால் அவரை எப்படி கொல்வது என்ற வியூகம் வகுத்தேன். மது விருந்தின் போது நான் அங்கு மது அருந்தி கொண்டிருந்தேன். என் அருகில் அதிக போதையில் சஞ்சீவ்ராஜ் அமர்ந்து இருந்தார்.

திட்டமிட்டபடி நான், நக வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் அவரது இதயத்தில் குத்தினேன். இதயத்தில் குத்தினால் உடனடியாக இறப்பார் என திட்டம் போட்டு அதை செயல்படுத்தினேன். என்னுடைய திட்டம் நிறைவேறியது. அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார். நான் வகுத்த வியூகம் எனக்கு கைகொடுத்தது.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான செந்தில்ராஜ் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story