காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் சென்னையில் பரபரப்பு சம்பவம்


காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் சென்னையில் பரபரப்பு சம்பவம்
x
தினத்தந்தி 21 Jan 2018 10:00 PM GMT (Updated: 21 Jan 2018 8:17 PM GMT)

பட்டதாரி பெண் ஒருவர் தனது காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் சென்னையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

சென்னை

கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பட்டதாரி பெண் ஒருவர் தனது காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் சென்னையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையைச் சோந்தவர் ஷோபனா (வயது 25/ பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அப்போது அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட சத்தியமூர்த்தி (27) என்பவருடன் காதல் மலர்ந்தது. சத்தியமூர்த்தி என்ஜினீயரிங் பட்டதாரி. வேலூரில் சிறைத்துறை நன்னடத்தை அதிகாரியாக வேலை செய்கிறார்.

ஷோபனாவும், சத்தியமூர்த்தியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலை சத்தியமூர்த்தியின் பெற்றோர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.

ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்தியமூர்த்தி, ஷோபனாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். வேலூர் அருகில் உள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினார். அவர்களது திருமணம் கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

இதற்காக ஷோபனா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருமணம் நடைபெற இருந்த கோவிலுக்கு சென்றார். ஆனால் சத்தியமூர்த்தி அங்கு வரவில்லை. கனவுகளுடன் காத்திருந்த ஷோபனா பெரும் ஏமாற்றம் அடைந்தார். மனம் உடைந்துபோன நிலையில் சென்னை திரும்பினார் ஷோபனா.

திருமணத்துக்கு வராததுடன், மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலுடன் சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் திடீரென்று ஷோபனா வீட்டிற்கு சென்றார். தனது திருமண பத்திரிகை ஒன்றை அவர் ஷோபனாவுக்கு கொடுத்தார்.

மதுரையில் தனது உறவுப்பெண்ணுக்கும், தனக்கும் 22-ந்தேதி (இன்று) திருமணம் நடைபெற இருப்பதாக சத்திய மூர்த்தி எந்த சலனமும் இன்றி தெரிவித்தார். இதைக்கேட்டு ஷோபனா கடுமையாக அதிர்ச்சி அடைந்தார். அவரது இதயம் சுக்குநூறாகிப் போனது.

காதலன் சத்தியமூர்த்தி முன்னிலையில், ஷோபனா தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்தியமூர்த்தி மீது குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சத்தியமூர்த்தியை நேற்று போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இதன் மூலம் மதுரையில் அவருக்கு இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று, ஷோபனா தனது காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story