அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு மரணம்
அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு மரணமடைந்தார்.
சோளிங்கர்,
அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு துணைத் தலைவருமான ஏ.எம்.வேலு (வயது 73) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் 1980 மற்றும் 1996-ல் இருமுறை அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது இவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கு சொந்தமான இடத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இவரின் மறைவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story