உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: குழு அமைத்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி


உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: குழு அமைத்து விசாரணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
x

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பல்லாவரம்,

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களில் ஹேமசந்திரன், பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். ஹேமராஜன், சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.

ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் 'கார்டியாக் அரெஸ்ட்' காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் இதுபற்றி சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றும் இளைஞரின் உறவினர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.



Next Story