ஈரானில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது


ஈரானில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 19 Jan 2017 9:30 PM GMT (Updated: 19 Jan 2017 7:11 PM GMT)

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல தொழில் அதிபர் பிளாஸ்டிக் கம்பெனியின் தலைமை அலுவலகம் 17 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது.

டெஹ்ரான்,

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல தொழில் அதிபர் ஹபீப் எல்கானியனுக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியின் தலைமை அலுவலகம் அந்த நகரில் உள்ள 17 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று காலை 8 மணி அளவில் இந்த கட்டிடத்தில் திடீரென பிடித்துக் கொண்ட தீ அத்தனை மாடிகளுக்கும் பரவியது.

தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைக்கும் படை வீரர்கள், ராட்சத கிரேன்களுடன் உடனடியாக அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர். அவர்கள் நாலாபுறமும், கிரேன்களில் இருந்தவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து சரிந்தது. அதன் இடிபாடுகள் தீயணைக்கும் வீரர்கள் இருந்த கிரேன்கள் மீது விழுந்தன. இதில் தீயணைக்கும் வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும், தீக்காயம் அடைந்தும் உயிர் இழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீ விபத்து எதனால் நிகழ்ந்தது என்பது உடனடியாக தெரியவரவில்லை. 

Next Story