துன்பம் நீக்கும் துளசி


துன்பம் நீக்கும் துளசி
x
தினத்தந்தி 21 Nov 2017 2:30 AM GMT (Updated: 20 Nov 2017 2:58 PM GMT)

மும்மூர்த்திகளில் ஒருவராகவும், காக்கும் கடவுளாகவும் வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி.

மும்மூர்த்திகளில் ஒருவராகவும், காக்கும் கடவுளாகவும் வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி. அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றின் முக்கிய இடம் துளசிக்கு உண்டு. தூய்மையின் மறு உருவமாக விளங்குகிறது துளசி.

பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் விஷ்ணுப்ரியா என்ற நாமத்துடன் துளசி பூஜைகள் நடைபெற்று வருவதே, துளசியின் பெருமையைச் சொல்லும். மரணத்தைக் கூட தள்ளிப்போட வைக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்கிறது புராணங்கள். நல்ல தேவதைகள் வாசம் செய்யும் துளசியை, உயிரிழந்தவரை  அடக்கம் செய்யும்போது சிதையில் சேர்ப்பதால், அவரது பாவங்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

பூலோக வாழ்விற்குத் தேவையான செல்வங்களைப் பெற வீடுகளில் துளசியை வைத்து தூப, தீபங்கள் காட்டி வழிபாடு செய்வது நம் மரபு. துளசியை வளர்ப்பதன் மூலம் தெய்வ அருள் மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவ மூலிகையாக செயல்படும் துளசியின் சாறு, பல நோய்கள் குணமாக உதவுகிறது. காற்றிலுள்ள மாசுக்களை அகற்றி தூய காற்றை சுவாசிக்க வைக்கிறது. ஆலயங்களில் துளசி தீர்த்தம் தருவதின் பலன் எண்ணற்றது.

பெருமாள் தலங்களில் இடம் பிடித்திருக்கும் துளசி, மூல முதற்கடவுளாக விளங்கும் விநாயகப்பெருமானுக்கும் அர்ச்சனைக்குரியதாகிறது. துளசி அர்ச்சனை செய்பவர்களுக்கு, நுண்ணறிவு பலன் கிட்டும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த துளசியின் மகிமையைப் போற்றி தினம் வணங்குவோம். வாழ்வில் ஏற்றங்கள் பெறுவோம்.

-சேலம் சுபா.

Next Story