சுவர்களில் அமைக்கப்படும் நவீன தோட்டங்கள்


சுவர்களில்  அமைக்கப்படும்  நவீன தோட்டங்கள்
x
தினத்தந்தி 22 Sep 2017 11:00 PM GMT (Updated: 22 Sep 2017 11:36 AM GMT)

ஒட்டு மொத்தமாக உலக அளவில் வெப்ப நிலை அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, எல்லா நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

ட்டு மொத்தமாக உலக அளவில் வெப்ப நிலை அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, எல்லா நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வீடுகளுக்குள் பசுமையான சூழலை விரும்புபவர்கள், மாடிகள், அறைகள் மற்றும் படிக்கட்டுகளுக்கு இடையில் தொட்டிகளில் செடிகள் வளர்ப்பது வழக்கம். தற்போது ஹைட்ரோபோனிக்ஸ், டவர், வெர்ட்டிகல், பாட்டில்கள், மாடிகள், பால்கனிகள் மற்றும் சமையலறை தோட்டம் என்று தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

வெர்ட்டிகல் கார்டன்

செங்குத்தான வீட்டு சுவர்களில் கிரில் அமைத்து சுவர்களை பாதிக்காமல் செடி, கொடிகளை வளர்க்கும் முறையானது அதன் அமைப்புக்கேற்ப வெர்டிக்கல் கார்டன் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை வெளிநாடுகளில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சுவர்கள், அடுக்கு மாடிகள் மற்றும் தூண்கள் ஆகிய பகுதிகளில் அலங்கார கொடிகளை இந்த முறைப்படி படரவிடலாம். வீடுகளின் கட்டமைப்பின்போது சுவர்களில், தக்க தொட்டி போன்ற அமைப்பை கட்டமைத்துவிட்டால் அவற்றில் மண்ணை நிரப்பி செடிகளை வளர்க்க முடியும்.

வெவ்வேறு இடங்கள்

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளிலும் கிரில் அமைத்து, வெர்ட்டிகல் கார்டன் தோட்டம் அமைக்கலாம். பால்கனி கிரில் சுவர், சமையலறை உள்ளிட்ட வீட்டின் எந்த இடத்திலும் செடி அல்லது  கொடிகளை வளர்க்கலாம். வெர்ட்டிகல் கார்டன் முறையில் வளர்க்கப்படும் செடிகளில் மூலிகை வகைகள், கீரை வகைகள், காய்கறி செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், சிலவகை பூச்செடிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம்.

முறைகள்

எந்த இடத்தில் எந்த வகை செடி வளர்ப்பது என்று தேர்ந்தெடுக்கவேண்டும். குறிப்பாக, தொட்டிகளில் மண் அளவை குறைத்து தேங்காய் நார் துகள், மண் புழு உரம் கலந்து செடிகளை நட வேண்டும். சுவர்களில் அதற்கென்றே பிரத்யேகமான கிரில்களை வடிவமைத்து, அதற்கேற்ப மண் தொட்டிகள் பொருத்தப்படும். சூரிய வெளிச்சம் இருக்கும் இடங்களில் காய்கறி செடிகள், கீரைகள், பூச்செடிகள், மூலிகை செடிகள், அழகு செடிகள் ஆகியவற்றை வளர்க்கலாம். சூரிய வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் வளரும் செடி வகைளும் இருக்கின்றன.

சுவர் பாதுகாப்பு

சுவர் கிரில்கள் அமைக்கப்படும்போது சுவர்களை பாதிக்காமல் பொருத்தவேண்டும். இந்த வகை செடிகளுக்கு நீர் அளவாக விட்டால் போதும். சொட்டு நீர்ப்பாசன முறைப்படி, ஒரு அடுக்கில் உள்ள தண்ணீர், அடுத்த அடுக்கின் துளை வழியாக, இன்னொரு அடுக்குக்கு சென்றுவிடும். இப்படி தொடர்ந்து வரிசையாக தண்ணீர் தேங்கி நிற்காமல் அனைத்து செடிகளுக்கும் சீரான பாயும். உரத்தில் தேங்காய் நாரின் கழிவுகள் இருப்பதால் ஈரப்பதம் எளிதாக உலராது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை உரங்கள்

ஆர்கானிக் கிரானுல்ஸ் என்ற இயற்கை குருணைகள், மாத்திரை வடிவில் கிடைக்கும் ஆர்கானிக் டேப்லெட்ஸ், ஆர்கானிக் என்ஸைம்ஸ், வேப்பெண்ணெய் போன்ற இயற்கை நுண்ணூட்ட உரங்களை பயன்படுத்தலாம். காய்கறிச் செடியில் பூச்சி தாக்கம் வராமல் இருக்க நீம் ஆயில், வேப்பம் புண்ணாக்கு அல்லது பஞ்சகவ்யா போன்றவற்றை பயன்படுத்தலாம்.

வீட்டில் குளுகுளு சூழல்

வெப்பத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதில் வெர்ட்டிகல் கார்டன் தனது சிறிய பங்கை செய்து வருகிறது. குடியிருப்புகள் அல்லது அலுவலகத்தில் அமைக்கும்போது அவை பசுமையாகவும், அழகாகவும் தோன்றுவதோடு, மூளையில் நல்ல உணர்வுகளையும் ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் கொண்ட ஆரோக்கியமான காற்றோட்ட வசதியும் கிடைக்கிறது. குறிப்பாக, வெளிப்புற சுவர்களில் அமைக்கப்படும் வெர்ட்டிகல் கார்டன், கோடை கால வெப்பத்தை வீடுகளுக்குள் நுழைய விடாமல் செய்வதுடன், ஆரோக்கியமான சூழலையும் ஏற்படுத்துவது கவனிக்கத்தக்கது.

Next Story