இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை தமிழக வீரர் விஜய்சங்கர் பேட்டி


இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை தமிழக வீரர் விஜய்சங்கர் பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2017 9:30 PM GMT (Updated: 21 Nov 2017 8:12 PM GMT)

‘இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் விஜய்சங்கர் தெரிவித்தார்.

சென்னை,

‘இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் விஜய்சங்கர் தெரிவித்தார்.

இந்திய அணியில் விஜய்சங்கர்

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. 2–வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் 24–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் டிசம்பர் 2–ந் தேதியும் தொடங்குகிறது.

இந்த நிலையில் வருகிற 24–ந் தேதி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் திருமணம் நடைபெற இருப்பதால் இலங்கைக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த 26 வயதான ஆல்–ரவுண்டர் விஜய்சங்கர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணத்தால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படவில்லை.

நெல்லையில் பிறந்தவர்

நெல்லையில் பிறந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த விஜய்சங்கர் 32 முதல் தர போட்டியில் விளையாடி 5 சதம், 10 அரைசதம் உள்பட 1,671 ரன்கள் குவித்துள்ளார். 27 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், வேகப்பந்து வீச்சாளருமான விஜய் சங்கர் இந்த மாதம் நடந்த ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தார். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற அவர் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2015–ம் ஆண்டில் இருந்து ‘இந்திய ஏ’ அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

தேசிய அணிக்கு தேர்வானது குறித்து விஜய் சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய அணியில் இடம் கிடைத்து இருப்பதால் பரவசத்தில் உள்ளேன். இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். தற்போது அது நனவாகி இருக்கிறது. எனது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அணியில் இடம் பிடித்ததை சிறப்பானதாக உணருகிறேன். இந்திய அணி வீரர்களின் ஓய்வறையில் அங்கம் வகிக்க இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

பந்து வீச்சு வேகம் அதிகரிப்பு

இந்திய ஏ அணியில் இடம் பிடித்து ஆடியது நான் ஆல்–ரவுண்டராக வளர வழிவகுத்தது. அத்துடன் நான் வீரராக முதிர்ச்சி காணவும், வெவ்வேறான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பதையும் கற்றுக்கொள்ள உதவியது. எனது பேட்டிங் பார்ம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நன்றாக இருக்கிறது. பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறேன். மும்பைக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளித்தது. ஆனால் எனது உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டது என்னை வலுப்படுத்தி இருக்கிறது. எல்.பாலாஜியுடன் இணைந்து பந்து வீச்சு பயிற்சி எடுத்தது எனது பந்து வீச்சு திறனை மேம்படுத்தி இருப்பதுடன், வேகத்தையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story