இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி சிறப்பான துவக்கம்
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான துவக்கம் பெற்றது.
மொகாலி,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணி பேட் செய்து வருகிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய மோசமான பேட்டிங்கே காரணமாகும்.
இதனால், மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்த துவக்க வீரர்களான ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. அபாரமாக விளையாடிய ஷிகர் தவானும் ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தனர்.
இந்திய அணி 21.1 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து இருந்த போது ஷிகர் தவான் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷிரேயாஸ் ஐயர் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து பேட் செய்து வருகிறார். இந்திய அணி 29 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் ஷார்மா 69 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
Related Tags :
Next Story