டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் சாய்னா, பிரனாய் தோல்வி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் சாய்னா, பிரனாய் தோல்வி
x
தினத்தந்தி 21 Oct 2017 9:15 PM GMT (Updated: 21 Oct 2017 8:31 PM GMT)

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 5-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுஷியை எதிர்கொண்டார். இதில் அகானே யமாகுஷி 21-10, 21-13 என்ற நேர்செட்டில் சாய்னாவை எளிதில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீரரான வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முன்னதாக கால்இறுதியில் அவர் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்செனை (டென்மார்க்) வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 13-21, 18-21 என்ற நேர்செட்டில் 2-ம் நிலை வீரர் சன் வான் ஹோவிடம் (தென்கொரியா) தோல்வி கண்டு வெளியேறினார்.

Next Story